Wednesday, December 16, 2009

எனது அம்மா


வியர்க்க விறுவிறுக்க
அலுவலகத்தில் இருந்து
இடைவேலை நேரத்தில்
பனிசும் வாழைப்பழமும்
தினமும் வாங்கி வந்து தந்தீர்

என்னை விட கனமான
புத்தகப் பையை சுமப்பதற்காக
பாடசாலை வாயில் அருகில்
தினமும் காத்து இருந்தீர்கள்

குச்சி ஐஸ் வாங்கித் தந்து
அதனை நான் உண்ணும் போது
எனது கண்ணில் தென்படும்
ஆனந்தத்தைக் கண்டு உள்ளம் பூரித்தீர்

அப்பாவிற்குத் தெரியாது
திருட்டுத் தனமாக செலவுக்கு
பணத்தை என் கையில் தந்தீர்

வாழ்க்கையில் நான் வீழ்ந்த
ஒவ்வொரு நொடிப்பொழுதிலும்
தோள் சாயத் தோள் கொடுத்து
ஆறுதலாய் இருந்தீர்

தலையைத் தூக்கிப்
பார்த்த போது
ஏதோ சொல்ல உதடுகள் துடித்தன
ஆனால், கருமையான கண்களில்
கண்ணீர் ஆறு மட்டுமே பெருக்கெடுத்தது

நான் எனது மகளுடன் ஆசையுடன்
அம்மாவைப் பார்க்க வந்துள்ளேன்
பரிசுகள் கொடுத்து ஆசி பெற
காலில் வீழ்ந்தேன்
ஆனால் என் தலையை உங்கள்
கைகளால் வருடவும் இல்லை
கண்ணீரால் என் தலை
நனையவும் இல்லை
ஏதோ ஒன்றை வெறித்துப்
பார்த்த வண்ணம் இருந்தீர்கள்

முன்பெல்லாம் நான் போக
ஆயத்தமாகும் போதெல்லாம்
என்னுடன் நெடுந்தூரம் வந்து
என் கைகளைப் பற்றிப் பிடித்து
"சென்று வா மகளே" என்று கூறியவர்
இன்று என்னை யாரென்றே
தெரியாதவர் போல்
வேறெங்கோ பார்த்த வண்ணம் இருகின்றார்

என்னுள் தேக்கி வைத்திருந்த
கண்ணீர் ஆறு என்னையும்
மீறிப் பெருக்கெடுத்தது
கார் கதவைத் திறந்து கொண்டு
வெளியே பாய வேண்டும்
போல் மனதில் வேதனை
என்னை வாட்டியது
கார் சீட்டில் தலை சாய்த்து
தோம்பி அழ மட்டுமே முடிந்தது

எனது பாச முள்ள அம்மா
இன்று சுயநினைவு இழந்து விட்டார்
என்னை அடையாளம் காண
முடியாதவராகி விட்டார்

கண்ணை இமை காப்பது போல
என்னைக் காத்த என் அம்மாவை
அன்போடு பார்த்துக் கொள்ள
இன்று என்னால் முடியாது
போய் விட்டது

நானும் இன்றைய இயந்திர
வாழ்வு வாழும் உலகில்
ஓர் சராசரி
இயந்திரமாகி விட்டேன்
மனதுள் சொல்லனா வேதனைகள் கோடி
என்னை அணு அணுவாகத்
துளைக்கின்றது
வேதனைகள் என்னை வாட்ட
கணம் கணம் நான்
மரணிக்கின்றேன்



பி.கு: அண்மையில் எனது அலுவலகத்தில் வேலை பார்க்கும் சகோதரி ஒருவர் எனது அப்பா எனும் தலைப்பில் ஓர் ஆக்கத்தை மின்னஞ்சல் செய்து இருந்தார். அதை வாசித்ததும் எனக்கு அதனை எனது மற்றைய நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என தோன்றியது. காரணம் அந்த ஆக்கம் என்னை மிகவும் பாதித்து இருந்த்தது. அதை தமிழில் மொழிபெயர்த்து இங்கு பதிந்து உள்ளேன். இதனை சகோதர மொழியில் Ron Silva அவர்கள் எழுதி உள்ளார்.

எனது அப்பா எனும் ஆக்கதில் வரும் தந்தை கதாபாத்திரத்தை ஓர் தாய் கதாபாத்திரமாக மாற்றியுள்ளேன். காரணம், எனது தாய் இன்று வரை எனக்கு செய்தவை போன்ற உணர்வு இதனை வாசிக்கும் போது எனக்கு ஏற்பட்டது.

தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்

Saturday, November 21, 2009

முதலுதவிக் குறிப்புகள்




கடந்த வார இறுதியில் லியோ கழகத்தினால் ஒழுங்கு செய்யப் பட்ட முதலுதவிப் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. அதில் பரிமாறிய முதலுதவிக் குறிப்புகள் சிலவற்றை இதில் பகிர்கின்றேன்.

1. பனடோல், பரிசித்தமோல் மற்றும் வலி நிவாரணிகளை வைத்தியரின் ஆலோசனை இன்றி எடுப்பப்தைத் தவிர்க்கவும்.

2. வைத்தியரின் ஆலோசனை இன்றி எந்த ஒரு மருந்து வகையையும் உட்கொள்ளுவதைத் தவிர்கவும்.

3. வீட்டில் மருந்து வகைகள் மற்றும் இரசாயனப் பொருட்களை சிறு பிள்ளைகளின் கைகளுக்கு எட்டுமிடத்தில் வைப்பதைத் தவிர்க்கவும்.

4. பாம்புக்கடி போன்ற விசக்கடி ஏற்படின் அவ்விடத்தருகில் இறுக்கக் கட்டுவதைத் தவிர்க்கவும்.இவ்வாறு செய்வதால் குருதிச் சுற்றோட்டம் பாதிக்கப் பட்டு அவ் அங்கம் செயலிழந்து விட சாத்தியமுண்டு.

5. இரத்தக் காயம் ஏற்படின் இயன்றளவு காயம் ஏற்பட்ட அங்கத்தை இதய மட்டத்தின் மேல் வைத்துக் கொள்ளவும். இதனால் இரத்தப் போக்கின் அளவைக் குறைக்க இயலும்.

6. பொதுவாக உடலில் இருந்து 1.2 லீட்டர் குருதி வெளியேரின், நோயாளி மயக்க நிலையை அடைவார். 2 லீட்டர் குருதி வெளியேரின் மரணம் ஏற்பட சாத்தியக்கூறுண்டு,

7. குருதி வெளியேறுவதைத் தவிர்க்க கோப்பித் தூள் போன்றவற்றை இடுவதைத் தவிர்க்கவும். அத்துடன் குருதிக் காயத்திற்கு பஞ்சு வைத்துக் கட்டுவதையும் தவிர்க்கவும்.

8. முதலுதவி செய்பவர் எப்பொழுதும் நோயாளியின் குருதி தனதுடலில் படுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், குருதி ஒரு அபாயகரமான நோய்க்காவி ஆகும்.

9. புகைப்பிடிக்கையில் உடலில் நிக்கொற்றின் எனும் இரசாயனப் பதார்த்தம் சேர்வதால் உடலில் ஒரு வித ஓமோன் சுரக்கும். இது இதயத்துடிப்பை அதிகரிக்கும். இதனால் உடல் நலம் பாதிக்கும்.

10. குருதி காயம் ஏற்படின் Nacl கொண்டு சுத்தப் படுத்தவும். NaCl ஒரு சிறந்த கிருமி நீக்கி ஆகும். NaCl சேலைனாக எடுக்கலாம். அல்லது உப்பு நீரைக் பாவிக்கலாம்.

11. எரி காயம் ஏற்படின் உடனடியாக ஓடும் நீரில் கழுவவும். கொப்பளம் ஏற்படின் அதனை ஊசி கொண்டு உடைத்தல் ஆகாது.

Monday, November 16, 2009

படித்ததில் பிடித்தது.....


சுகமானது எதுவென்று
நிலவிடம் கேட்டேன் - ஒளிந்து கொண்டது.
காற்றிடம் கேட்டேன் - வருடிச் சென்றது.
இதயத்திடம் கேட்டேன் - பிரிவு என்றது.
ஏனெனில், பிரிவில் தான்
உன் நினைவுகள் மீட்கப்படுகின்றன.

Thursday, November 12, 2009

மலர எத்தனிக்கும் ஒரு பூ


வலைப்பூக்கள் எனக்கு புதிதல்ல. ஆனால் வலைப்பூக்களில் புதிதாக மலர்வதற்குப் புதியவளே. :)

இற்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன் எனது நண்பி பாவை எழுதிய வலைப்பூவைப் பார்த்தேன். மிகவும் அற்புதமாக எழுதப்பட்டு இருந்த அந்த வலைப்பூ பதிவுகள் என்னை மிகவும் கவர்ந்து இருந்தது.

அப்பொழுது நான் இரண்டாம் வருடத்தில் கற்றுக் கொண்டு இருந்தேன். நிறைய நேரம் மீதமாக இருந்த காலம் அது. பொழுதுபோக்காகப் பதிவுகள் இடலாம் என்று எண்ணி நங்கை எனும் வலைப்பூவினையும்(ஆங்கிலத்தில்) கஸ்தூரி எனும் வலைப்பூவினையும்(தமிழில்) எழுத ஆரம்பித்தேன். அதன் பின் வேலைக்கு செல்ல ஆரம்பித்ததும் வழமை போல் நேரம் எனக்கு எதிராக சதி செய்தது. எழுதுவதற்கு கிடைக்கும் நேரம் குறைந்தது. அவ்வப்போது நங்கையில் பதிவுகளை இட்டு வந்தேன். கஸ்தூரியின் மலர்ச்சி அப்போது கைகூடவில்லை.

பின்பு அண்மைக் காலமாக சில வலைப்பூக்களை இரசிக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிட்டியது. அருமையான பதிவுகள் பலவற்றை வாசிக்க முடிந்தது. வலைப்பதிவு எழுதும் ஆர்வம் மீண்டும் என்னுள் துளிர்விட்டது. ஆனாலும் இறுதி ஆண்டுப் பரீட்சை மற்றும் Project வேலைகள் காரணமாக அது உரம் போடுப்படாமல் விடப்பட்டது. தற்போது அவை எல்லாம் முடிந்து, வெட்டியாக இருக்கும் காலம். எனவே மீண்டும் பதிவுகளை இடலாம் என்று எண்ணி முதலாவது கிறுக்கலை ஆரம்பித்துள்ளேன். தொடர்ந்து எழுத இறைவன் அருள் புரிய வேண்டும்.


பி.கு: பதிவுலக எழுத்துக்கு புதிதாகையால் பிழைகள் இருப்பின் மன்னித்து, தவறுகளை சுட்டிக் காட்டவும்.